கொலம்பியாவில் கைது செய்யப்பட்ட உலகின் மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்காரரான டைரோ அன்டனியோ உசுகா அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கொலம்பிய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை கொலம்பிய விமானப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் 500 பேர் 22 ஹெலிகப்டர்களுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போது டைரோ அன்டனியோ உசுகா கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் தேடப்படும் நபராக உள்ள டைரோ உசுகாவை ஒப்படைப்பவர்களுக்கு ஐந்து மில்லியன் டொலர் பரிசுத் தொகையை அமெரிக்க அரசு அறிவித்திருந்தது இந்நிலையில் அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவார் என கொலம்பியா அறிவித்துள்ளது.
டைரோ 2003 முதல் 2014 வரையான காலப்பகுதியில் குறைந்தபட்சமாக 73 மெட்ரிக் தொன் கொக்ஹெய்ன் போதைப் பொருளை உலகின் பல பாகங்களுக்கும் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பொலிஸ் அதிகாரிகளின் படுகொலை, சிறுவர்கள் கடத்தல் மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றங்களுடனும் கைது செய்யப்பட்ட டைரோ அன்டனியோ உசுகாவுக்கு தொடர்புள்ளதாக கொலம்பிய ஜனாதிபதி இவான் டியூக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டைரோ உசுகாவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த ஏதுவாக நீதிமன்றின் அனுமதி பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கொலம்பியா நீதி அமைச்சர் வில்சன் ரூயிஸ் தெரிவித்தார். இந்த செயல்முறை முடிவடைய நான்கு வாரங்கள் ஆகலாம் எனவும் அவா் குறிப்பிட்டார்.